Thursday 4 January 2018

தேவை நிரந்தரத் தீர்வு…

பல்வேறு போராட்டங்களுக்குப்பின்... ஒப்பந்த ஊழியர்களது சம்பளப்பட்டுவாடாவிற்கான.. நிதி ஒதுக்கீடு இன்று 
தமிழகத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை மத்திய நிர்வாகத்தால் மிகவும் இழுத்தடிக்கப்பட்டு விட்டது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும், 
ஒப்பந்த ஊழியர் சங்கங்களும் தொடர்ந்து தங்களது போராட்டத்தை 
நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. 

பலமுறை தொழிலாளர் ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும் நிர்வாகம் அவசர கதியில் இப்பிரச்சினையில் இயங்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 
நவம்பர், டிசம்பர் என இரண்டு மாத சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு முழுமையாக செய்யப்படுமா? அல்லது அரைகுறையாக ஒதுக்கப்பட்டு நவம்பர் மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுமா என்பதுவும் கேள்விக்குறியாக உள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்களது எண்ணிக்கைப் பெருமளவில் குறைக்கப்படும் என்பதுவும் தற்போதைய விவாதப்பொருளாகி உள்ளது. ஆளெடுப்பு அறவே இல்லாத நிலையில் BSNL நிறுவனம் ஒப்பந்த ஊழியர்கள் இல்லாமல் இயங்கிட இயலாது என்பது யாவரும் அறிந்த உண்மை. நிர்வாகம் இதைப்பற்றி சிந்திக்காமல் ஒப்பந்த ஊழியர்களைக் குறைக்க முயற்சிக்குமேயானால் அது ஒப்பந்த ஊழியர்களின் சோற்றிலும், தன் தலையிலும் மண்ணை அள்ளிப்போடும் மனிதாபிமானமற்ற… சிந்தனையற்ற செயலாக அமையும். 
அத்தகைய சூழலில் மிகவும் 
கடுமையான போராட்டம் வெடித்தே ஆகும்.

நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதை முறைப்படுத்த வேண்டும். அந்தந்த மாவட்டத் தேவைகளுக்கு ஏற்ப நிலைமை மாறுபடும். எனவே மாவட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

பணிபுரியும் ஊழியர்களுக்கு 7ம் தேதி கூலி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரே குத்தகைக்காரருக்கு பல மாவட்டங்களில் குத்தகை அளிக்கும் முறையைக் கட்டுப்படுத்த வேண்டும். நிர்வாகம் பில்கள் பட்டுவாடாவில் தாமதம் காட்டினாலும் குத்தகைக்காரர் தனது நிதியில் இருந்து மாதம் தவறாமல் கூலியை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடு குத்தகை வழங்கப்பட வேண்டும்.

பாடுபட்டு உழைக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு...
எந்தவித எதிர்காலமும் இன்றி…
பணிபுரியும் அடிமட்ட ஊழியருக்கு…
தேவை நவம்பர் மாத சம்பளம் மட்டுமல்ல….
தேவை மாதாமாதம் கையேந்தாத நிரந்தரத்தீர்வு….

No comments:

Post a Comment