Tuesday 29 August 2017

சமூக பாதுகாப்புத்திட்டம்
BSNL BENEVOLENT FUND

சமீபகாலமாக நமது துறையில் அகால மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 1500 ஊழியர்களும்,
 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் மரணத்தை தழுவுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அகால மரணங்களால் துன்பப்படும் குடும்பங்களுக்குத் தற்போதுள்ள ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தால்  முழுமையான நிவாரணம் அளிக்க இயலவில்லை. 
ஊழியர்களுக்கு ஒரு லட்சமும், அதிகாரிகளுக்கு 3லட்சம்/5லட்சம் ஆயுள் காப்பீடாக வழங்கப்படுகின்றது. இன்றைய பணமதிப்பில் ஒரு லட்சம் என்பது மிகக்குறைந்த தொகையாகும். 

எனவே BSNL அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் முழுக்க முழுக்க அவர்களது பங்களிப்பில் நமக்கு நாமே என்ற சுய நிதி ஆதார அடிப்படையில் BENEVOLENT FUND - உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே சங்கங்களிடம் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டிருந்தது.  தற்போது அதற்கான ஒரு முன்வரைவை நிர்வாகம் வெளியிட்டு ஊழியர்களிடமும், சங்கங்களிடமும் 04/09/2017க்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தைப் பற்றி நாம் சிந்திக்கும் முன்பாக…
தற்போது LIC மூலமாக நடைமுறையில் உள்ள GSLIS என்னும்
ஆயுள் காப்பீட்டுத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களுக்கான ஒரு லட்சம் என்பது 5 லட்சமாகவும்.
அதிகாரிகளுக்கு 6லட்சம்/10 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும்.

மேலும் இந்த திட்டம் கருணை அடிப்படையிலான 
வேலைக்கு மாற்றா என்ற சந்தேகம் எழுகின்றது….
எனவே இந்த சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் வயது வரம்பின் அடிப்படையில் 4 பிரிவுகளாக
21 முதல் 40 வரை
40 முதல் 50 வரை
50 முதல் 55 வரை
55 முதல் 60 வரை என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவான 21 முதல் 40 வரை என்பதில் முழுக்க முழுக்க
BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

இவ்வாறு வயதை வைத்துப் பிரிப்பதற்குப் பதிலாக 
BSNL ஊழியர்கள்/DOT ஊழியர்கள் என பிரிக்கப்பட வேண்டும். ஏனெனில் DOT ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு. 
DCRG என்னும் பணிக்கொடை 20லட்சம் வரை உண்டு. 
ஆனால் BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 
குடும்ப ஓய்வூதியம் இல்லை. 
புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் 
அரசு ஓய்வூதியத்திற்கு இணையாக நிச்சயம் இருக்காது. 
மேலும் பணிக்கொடையின் அளவும் குறைந்த தொகையிலேயே உள்ளது. எனவே DOT ஊழியர்கள்/BSNL ஊழியர்கள் 
எனப்பிரிப்பதே சரியாக இருக்கும்.

55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு 7லட்சம் நலநிதியாகவும்…
21 முதல் 40 வரை உள்ள ஊழியர்களுக்கு 
14 லட்சம் நலநிதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

55 முதல் 60 வயது வரை உள்ள தோழர்களுக்குத்தான் 
குடும்ப பொறுப்புக்கள் கூடுதலாக இருக்கும்.
வயது முதிர்ந்த தாய்,தந்தையர்...
வயதுக்கு வந்த பெண்குழந்தைகள்...
வேலைவாய்ப்பு இல்லாத ஆண்பிள்ளைகள்...
இரத்த அழுத்தம், சர்க்கரை என நலிந்து போகும் தேகம்... 
அடிக்கடி உடல்நலம் கெடும் மனைவி...
ஊரைச்சுற்றிக் கடன்... 
என பலப்பல தொல்லைகள் துரத்தும் காலம் 55க்கு மேல்தான். 

தாமதத்திருமணம் LATE MARRIAGE செய்தவர்களுக்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய காலமாகவும்...
அதன்பின் திருமணம் செய்து வைக்க வேண்டிய காலமாகவும் இருக்கும்.
எனவே 55 முதல் 60 வரையுள்ள ஊழியர்களுக்குத்தான கூடுதல் நலநிதி அளிக்கப்பட வேண்டும்.

மேலும் மாதந்தோறும் ரூ.500/600/700/800 
என்ற பங்களிப்பு கூடுதலான தொகையாகும். இந்த தொகையோ அல்லது ஒரு பகுதித்தொகையோ ஓய்வு பெறும்போது திருப்பிக்கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

ஊழியர்களுக்கு நல நிதி குறைந்த பட்சம் 7லட்சம் என்பதும்…
அதிகாரிகளுக்கு நலநிதி அதிகபட்சம் 40 லட்சம் என்பதும் ஏற்புடையதல்ல…

ஊழியர்களுக்கு 500 ரூபாய் பங்களிப்பாகவும்…
அதிகாரிகளுக்கு 1000 ரூபாய் பங்களிப்பாகவும் நிர்ணயம் செய்யலாம்…
ஊழியர்களுக்கு நலநிதி 30 லட்சம் எனவும்….
அதிகாரிகளுக்கு நலநிதி 40 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யலாம்…

இதில் பணிக்கொடை அளவைக் கழித்து விட்டு 
மீதமுள்ள பணைத்தை பட்டுவாடா செய்யலாம். 
உதாரணமாக மரணமுற்ற ஊழியர் குடும்பம்  
16 லட்சம் பணிக்கொடை பெற்றால் 
மீதமுள்ள 14 லட்சம் நலநிதியாக வழங்கலாம்.

நலநிதி திட்டம் என்பது 
நல்லதொரு நமக்கு நாமே திட்டம்
இந்த திட்டம்  ஊழியர்களால் 
முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் சங்கங்களால் விவாதிக்கப்பட்டு
முழுமைப் படுத்தப்பட வேண்டும். 

ஒருவார கால அவகாசம் அளித்து விட்டு 
கருத்துக் கேட்பது அவசரக்கோலமாகவே முடியும்.

எண்ணித்துணிக கருமம் 
என்பது வள்ளுவன் வாக்கு….

No comments:

Post a Comment