Thursday 2 March 2017

மயானக்கொள்ளையும்…
 மாநிலச்செயற்குழுவும்… 


சேலத்தில் 04/03/2017...
மாநில செயற்குழு என்ற
விளம்பரச்செய்தியைப் பார்த்ததும்...
ஏனோ நமக்கு சேலத்து மயானக்கொள்ளை
தவிர்க்க முடியாமல் நினைவில் வந்து வந்து செல்கிறது.

மயானக்கொள்ளையில் மாறுவேடம் போட்டு
ஆக்ரோஷமாக ஆட்டைக்கடிப்பார்கள்...
அரிவாளைக் கடிப்பார்கள்...
கோழியைக்கடிப்பார்கள்...
கும்மாளமடிப்பார்கள்.
இதைப் பார்த்து ஒரு பெருங்கூட்டம் கைதட்டி மகிழும்.

கடைசியில் அரிதாரத்தைக் கலைத்து விட்டு
அவரவர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
இது போல்தான் நமது மாநில செயற்குழுவும் நடைபெறும்
என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகமில்லை.

செயற்குழு விளம்பரத்திலே
இருபது பேர்களின் பெயர்கள் தென்படுகின்றன.
இருபதிலே பதினொரு பேர் ஓய்வு பெற்றவர்கள்.
உலக நடப்புக்களை... நாட்டு நடப்புக்களை...
புட்டுப்புட்டு வைக்கக்கூடியவர்கள்...

மீதமுள்ள ஒன்பது பேரும்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
மைக்கை முழுங்கி தண்ணி குடிப்பவர்கள்.

இடையிடையே புகழாரங்கள்...
வண்டி வண்டியாக சூட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்...
புகழாரங்களுக்கு இடையே போட்டிப்பூசல்கள்... 
வேறு வெடித்துத்தொலையும்...

இப்படியாக ஆட்டம் பாட்டம் 
எல்லாம் முடிந்த பின்..
பாவப்பட்ட மாநிலச்செயலரும்...
பரிதாபத்திற்குரிய மாவட்டச்செயலர்களும்...
ஊமைகளான மாநில சங்க நிர்வாகிகளும்...
ஏகப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களும்
எப்போது பேசுவார்கள்…?
என்னத்தைப் பேசுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும்
ஏராளமான பிரச்சினைகள் தேங்கிக்கிடக்கின்றன.
IMMUNITY மாற்றல்கள் கூட இழுத்தடிக்கப்படுகின்றன…
விருதுநகரைக் கேட்டால் வேதனை தெரியும்...
மாவட்டச்செயலர்கள் சேலத்திற்கு வண்டி ஏறும் போது
“அண்ணே… எங்கள் பிரச்சினையை மறக்காமல் பேசி வாருங்கள்”
என்று சொல்லித்தான் அடிமட்டத்தொழிலாளி
விடை கொடுத்து அனுப்புவான்.

இந்தக் கொள்ளைக்கும்...கூத்திற்கும் மத்தியில்
பாவப்பட்ட தொழிலாளியின் பிரச்சினைக்கு
விடை கிடைக்குமா? என்பதுதான் நமது கேள்வி.
தமிழக NFTE  இதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால்
அது தொழிலாளியை விட்டுத்தூர விலகி
மரணித்துக்கொண்டிருக்கின்றது என்பது
மறுக்க முடியாத உண்மையாகி விடும்.

செயற்குழுவை ஆரம்பியுங்கள்…
இந்த இயக்கத்தின் வேர்களான
மாவட்டச்செயலர்களை பேச விடுங்கள்…
அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்
மாநிலச்சங்க நிர்வாகிகளை பேச விடுங்கள்…
ஓய்வு பெற்றவர்களை 
ஓய்வு நேரத்தில் பேச விடுங்கள்…
மாலை மரியாதை வேண்டி மண்டிக்கிடப்பவர்களை
மாலை நேரத்தில் பேச விடுங்கள்…
தொழிலாளியின் விடியலுக்காக
வேலை செய்பவர்களை 
விடியலில் பேச விடுங்கள்…
இதுவே நமது அன்பான வேண்டுகோள்…

ஏனெனில் நாம் நடத்துவது செயற்குழுவை…
மயானக்கொள்ளைகளையல்ல…

தொழிலாளி துளித்துளியாகத் தருவதால் வரும்
ஆயிரங்களையும்… லட்சங்களையும்
ஆடம்பரங்களுக்கு செலவழிப்பதும்…
விழலுக்கு நீரிறைப்பதும்… முறையா? சரியா?
என்பதுவே ஒரு சாதாரணத் தொண்டனின் கேள்வி…

1 comment:

  1. மாநிலசெயற்குழுனு போட்டுருக்காங்க ஆனா சேலம் மாவட்டசெயலாளர் வயக்காட்ட காக்க மாநில செயற்குழுவுல திட்ட மிடுவோம்னு சொல்லுறாரு இதுக்கு முன்னாடி காளையை வேற பாதுகாத்தாராம். காரைக்குடி கேட்ட கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாநில சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டவர்களா இல்லையா என்பதை மாநில செயலர் ரூம் போட்டு யோசிக்கவே நேரமில்லை இதுல மாநில செயற்குழு யாரைக்கேட்டு போட்டாங்கனு எனக்கும் தெரியலைனு மாநில செயலர் சொல்லாம சொல்றது மாதிரி தெரியுது, மொத்தத்துல மாநில செயலரின் கட்டுப் பாட்டில் இல்லாத சங்கமாக தலை இல்ல ............மாக தெரிகிறது. இதுல அடிமட்ட தொண்டனாவது அவனது கோரிக்கையாவது? சும்மா காமெடி பண்ணாதீங்க பாஸ்.
    செயற்குழுவோட ஆய்ப்பாடு பொருள் என்னவென மாநில வலைதளத்தில் மாநில செயலர் சொன்னால் அடிமட்ட ஊழியர்களுக்கும் மாநில செயற்குழுவின் மகத்துவம் தெரியும். செய்வாரா?

    ReplyDelete