Friday 17 February 2017

தூய்மையும்… பொய்மையும்…

நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பதவிக்கு வந்த பின்பு
விளக்கமாற்றைக் கையில் எடுக்காத VIPகளே கிடையாது.
நாடாள்பவர்கள் நாளும் பொழுதும் குப்பையைப் பொறுக்குகிறார்கள்.

அரசியல்வாதிகள், நடிகர்கள், முதலாளிகள் என தேசமே
தெருக்கூட்டும் திருப்பணியில் மூழ்கியுள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பது தேசத்தின் அவமானம் என
தெருவெங்கும் கவர்ச்சி விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கிறது…

இந்திய தேசத்தின் கிராமங்கள் வறுமையின் அடையாளங்கள்…
அங்கே உணவுக்கு வழியில்லை… உறங்கவும் இடமில்லை…
ஆனாலும் கழிப்பறை அவசியம் கட்டவேண்டுமென…
கட்டாயப்படுத்தப்படுகின்றனர் கிராமத்து அப்பாவிகள்…

கழிப்பறை கட்டுவதற்கு முன்பணமாக 2000 உடனே தரப்படும்…
கழிப்பறை கட்டி முடித்த 3 மாதங்களுக்குள் 12000 தரப்படும் என
கனிவோடு மக்களுக்கு அரசு கவர்ச்சியான உத்திரவாதம் தந்தது…

ஆண்டவனை நம்பாமல்… ஆள்பவர்களை நம்பாமல்…
அப்பாவி மக்கள் இந்த தேசத்தில் வாழ முடியுமா?

இப்படித்தான் அரசை நம்பி
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டி என்னும் சிற்றூரில்…
பாகிரதி கண்டே என்னும் பாவப்பட்ட மனிதன்…
கடன் வாங்கி கழிப்பறை கட்டினான்…
பாகிரதி கண்டே மட்டுமல்ல
பாக்கி இருந்த 126 வீட்டுக்காரர்களும்…
கடன்பட்டு கழிப்பறை கட்டினர்…

கட்டி முடித்து 3 மாதங்கள் கழித்து
அரசிடம் உதவித்தொகையைக் கேட்டனர்…
கழிப்பறை கட்டிய காசைக் கேட்டவர்களுக்கு
மலத்தை விட மோசமான வார்த்தைகள் பரிசாயின…
சிலரை அதிகாரிகள் அடித்து விரட்டினர்…
சிலரை மிரட்டி விரட்டினர்…

பாவப்பட்ட ஆண்டி கிராம மக்கள்
ஐந்து வட்டிக்கு வாங்கி தங்கள் இல்லங்களில்
கழிப்பறையைக் கட்டினர்…
ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ இருபது ஆயிரம் செலவு…
ஆண்டுக்கு வட்டி மட்டும் ரூபாய் 12 ஆயிரம் கட்ட வேண்டும்…
வட்டியையும் கட்ட முடியவில்லை…
அரசிடம் இருந்து சொன்னபடி உதவியும் கிட்டவில்லை…
வேறு வழியின்றி கிராமத்தைக் காலி செய்து விட்டு
உத்திரப்பிரதேசத்திற்கு செங்கல் செய்யும் வேலைக்கு
பாகிரதி கண்டே தன் குடும்பத்தினருடன் சென்று விட்டார்…

சமீபத்தில் ஜோக்கர் என்னும் தமிழ்ப்படம்..
இத்தகைய கழிவறைச் சம்பவத்தைப் படமாக்கியிருந்தது….
அந்த திரைப்படம் உண்மைதான் என்பதை
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆண்டி கிராம நிகழ்ச்சி நிருபித்துள்ளது…

ஆண்டி என்ற பெயருள்ள கிராம மக்கள்…
அரசினால் உண்மையிலேயே ஆண்டிகளாகிவிட்டனர்…

தூய்மை இந்தியா திட்டத்திற்கு செய்யப்படும் விளம்பரப்பணத்தை
மக்களுக்கு கொடுத்தாலே போதும்….
வீடு தோறும் கழிப்பறை கட்டப்படும்…

வாய்மையே வெல்லும் என்றார் மகாத்மா காந்தி…
தூய்மையே வெல்லும் என்கிறார் பரமாத்மா மோடி…
பொய்மையே வெல்லும் என்கிறார் பாவாத்மா பாகிரதி கண்டே…
வாழ்க தூய்மை இந்தியா… 

No comments:

Post a Comment