Saturday 22 October 2016

வாய்ப்பூட்டு 

ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக CORPORATE அலுவலகம் 
21/10/2016 அன்று ஒரு உத்திரவை வெளியிட்டுள்ளது.
அதனைப் படித்தவுடன் நினைவுகள் 
1947க்கு முன் சென்று விட்டன...

இந்திய வரலாற்றில் இரண்டு தலைவர்களுக்கு 
அன்றைய பிரிட்டிஷ் அரசு 
வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டிருந்தது...
வடக்கே திலகர்... தெற்கே தேவர்...

இருவருடைய பேச்சையும் கேட்டால் 
இறந்த பிணமும் எழுந்து போராடும் என்று 
இந்திய மக்கள் அந்நாளில் கூறுவார்கள்...

1937ல் சென்னை மாகாணத் தேர்தல் நடைபெற்றது...
காங்கிரஸ் சார்பில்..
இராமநாதபுரத்தில் தேவரும்...
புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தியும்..
விருதுநகரில் காமராஜரும் போட்டியிட்டனர்...
தமிழ்நாடு முழுக்க தேவர் பிரச்சாரம் செய்ய 
காங்கிரஸ் கட்சி அவரைக்  கேட்டுக்கொண்டது...
ஆனால் வெள்ளை அரசோ தேவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தது...

காரைக்குடி கானாடுகாத்தானில் பிரச்சாரக்கூட்டம்... 
தீரர் சத்தியமூர்த்தி தனது  பிரச்சாரத்தைத் துவங்கும் போது 
அங்கு வந்த காவல்துறை அவரைப் பேசவிடாமல் தடுக்கிறது...
தடை உத்திரவு உள்ளதென்றும்... 
மீறிப்பேசினால் சுட்டு விடுவோம் என்றும் எச்சரிக்கிறது..
அகிம்சாவாதியான சத்தியமூர்த்தி அமைதியாக 
அவ்விடத்தை விட்டுப்  பேசாமல்  அகன்று சென்று விட்டார்..

இந்த செய்தியைத் தேவர் கேள்விப்படுகிறார்...
உடனே மறுநாள் அதே கானாடுகாத்தானில்...
பிரச்சாரக் கூட்டத்தைத் தேவர் அவர்கள் கூட்டுகிறார்...
தேவர் பேச்சைக் கேட்டிட தேர்த்திருவிழாவென 
செட்டிநாடு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது...
வழக்கம்போலவே காவல்துறை கெடுபிடி செய்கிறது...

தேவர் மேடை ஏறுகிறார்...
பேச்சுரிமை எங்கள் பிறப்புரிமை...
இதைத்தடுக்க எவனுக்குமில்லை உரிமை...
இதோ... எனது பிறப்புரிமையை 
இந்த மேடையிலேயே நான் நிலை நாட்டுவேன்...
இந்த மேடையிலேயே எனது உரிமைக்காக நான் 
இன்னுயிர்  விடத்தயார்...  
வெள்ளைக்  காவல்துறை அதிகாரிகளே... 
உங்களுக்குத் தைரியம் இருந்தால்...
என் நெஞ்சில் உங்கள் துப்பாக்கிகளால் சுடுங்கள்"...
என அஞ்சாத வீர உரை நிகழ்த்தினார் தேவர் அவர்கள்...
மக்கள் கூட்டம் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஆர்ப்பரித்தது...
காவல்துறை தலை கவிழ்ந்து நின்றது...
தேவரின் தேச பக்தியும் வீரமும் கண்டு 
வாய்ப்பூட்டுச் சட்டமும் வாய் மூடி நின்றது...
இது தேச வரலாறு... பசும்பொன் தேவரின் வரலாறு...

இந்த தேசத்தில்தான்... இந்திய தேசத்தில்தான்... 
விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்...
இன்னும் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்படுகிறது...

இப்படித்தான் BSNL நிறுவனமும் 
21/10/2016 அன்று 
வாய்ப்பூட்டு ஒன்று போட்டுள்ளது...

BSNL நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களைப்பற்றி 
யாரும் வாயைத்திறந்து பேசக்கூடாது...
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக இருந்தாலும் 
அவர்களுடைய பிரச்சினையை பேசக்கூடாது...
தலமட்ட... மாநில மட்ட..  JCMகளில் 
ஒப்பந்த ஊழியர்களது  பிரச்சினையை எழுப்பக்கூடாது...
எதுவாக இருந்தாலும் ஒப்பந்தக்காரரிடம்தான் பேச வேண்டும்...
என்பதுதான் தற்போது நமது நிறுவனம் 
மனிதநேயமற்றுப் போட்டுள்ள
துருப்பிடித்த பூட்டுச்சட்டம்...

பூட்டிய  பூட்டுக்களை உடைப்பதும்..
மூடிய கதவுகளை திறப்பதும்...
தொழிலாளி வர்க்கத்தின் கைவந்த கலை என்பது 
பாவம்... தேசத்தின் வரலாறு அறியாத 
இது போன்ற உத்திரவைப்போடும் 
அதிகாரிகளுக்கு... தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

1 comment:

  1. எங்கே செல்கின்றோம் நாம்?

    ReplyDelete