Tuesday 11 October 2016

மாமணியை  மறுப்பார் உண்டோ?

BSNL  ஊழியர்கள்  போனஸ் என்னும் திருநாமத்தை ...
2008-2009ம் ஆண்டு காதில் கேட்டார்கள்...
அதன் பின்... 5 ஆண்டுகள்...
2009-2010, 2010-2011, 2011-2012, 2012-2013, 2013-2014
போனசில் வெறும் நாமம்தான்...

இதோ... 2014-2015ம் ஆண்டிற்கு மீண்டும் 
போனஸ் என்ற திருநாமம் நம் காதில் விழுந்துள்ளது...

வாராது வந்த மாமணியைக் கண்டு...
வாய்  வலிக்கப்  பெருமை பேசும் தோழர்கள்...
பாங்க்ரா நடனங்களும்... பாங்கான நடனங்களும்...
பகட்டான வசனங்களும்   எனக் கூத்தாடும் இணையதளங்கள்...
போனஸ் என்றாலே புலம்பல் என்பது போய் 
எங்கும் தாண்டவமாடும்  மகிழ்ச்சி அலம்பல்கள்...
இனிப்பெடு... கொண்டாடு என 
பெருந்தலைவர்களின் கட்டளைகள் வேறு...
15க்குள் போனஸ் பட்டுவாடா ஆகிவிடும் என்று செய்திகள்...

இதையெல்லாம் நம்பி...
இருட்டுக்கடையில்..  
இருபது கிலோ அல்வாவிற்கு 
இங்கிருந்தே ஆர்டர் செய்தாகிவிட்டது...
இந்த நேரம் பார்த்து...
இயக்குநர்  மனிதவளம்...
இன்முகத்துடன்   ஊழியர்களுக்கு 
இதமான வேண்டுகோள் விடுத்துள்ளார்...

" 3வது ஊதியக்குழு வரை...
BSNL ஊழியர்கள் தாமாக முன்வந்து 
போனஸ் பட்டுவாடாவை மறுதலிக்க வேண்டும்... 
இது நிர்வாகத்தின்  கட்டாயம் அல்ல... 
ஆனாலும் காலத்தின் கட்டாயம்...
என்ற வேண்டுகோள் DIRECTOR(HR) அவர்களால் 
ஊழியர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது...

பொது நலன் கருதி சொந்த நலனை 
நாம் விட்டுக்கொடுத்திடலாம்... தவறில்லை...
நாம் விட்டுக்கொடுப்பதால் ஆகப்போவதென்ன?

2014-15ம் ஆண்டிற்கான போனஸ் மொத்தச்செலவு 
ஏறத்தாழ 70 கோடி வரைதான் ஆகும்...
2014ம் ஆண்டில்  தேய்மானமே  6000 கோடி ஆகியுள்ளது...
70 கோடி கூடுதல் செலவால் 
BSNL  மேலும் தேய்ந்து விடப்போவதில்லை...

இந்திய தேசத்தில் போனஸ் என்பது...
லாப நட்டம் பார்த்துக் கொடுப்பதல்ல...
போனஸ்  பட்டுவாடா  என்பது.. 
உழைப்பை மதிக்கும் ஒரு அடையாளம்... 
உழைப்பாளிக்குத் தரும் வெகுமதி...

உழைப்பாளி தன் வெகுமதியை விட்டுத்தரலாம்... 
இந்திய தேசத்தின் ஆகப்பெரும் நிறுவனம்..
தன் பெருமையை விட்டுக்கொடுக்கலாமா? 

No comments:

Post a Comment