Tuesday 12 July 2016

தேர்வுகளும்... தீர்வுகளும்...

தொலைத்தொடர்புத்துறை... 
கரத்தால் உழைப்போருக்கும்...
கருத்தால் உழைப்போருக்கும்..
வாழ்வு தந்தது... வளர்ச்சி தந்தது...

கற்றவர்கள்  தேர்வெழுதி தங்கள் நிலை உயர்த்தினர்.
கல்லாதோர் காத்திருந்து பதவி  உயர்வு பெற்றனர். 
 தேர்வுகள் சில காலம்  தேங்கிப்போயின.
திறமை கொண்டோர்  பதவி உயர்வுக்காக ஏங்கிப்போயினர்.

இன்று அனைத்துத் தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக
தேர்வு என்னும் அசையாத்தேர் அசைய ஆரம்பித்துள்ளது. 
தேர்வுகளுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டன.  
தேர்வுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.
தேர்வு முடிவுகள் வெளிவரத்துவங்கியுள்ளன. 
பல இளம் தோழர்கள் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 
நமக்கு இந்தக் காட்சியைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அந்த வகையில் 22/05/2016 அன்று நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகளும் அவ்வாறுதான் வெளிவந்துள்ளது.
ஆனால்  அதில் சில குளறுபடிகள்...
இந்தக் குளறுபடிகளை நீக்கவும்..
சட்டரீதியாக உள்ள சிக்கல்களைப் போக்கவும்
அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களால் ஆன 
செயல்களை செய்து கொண்டுதான் உள்ளனர்.

முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
இளம் தோழர்களின் ஆதங்கம் நியாயமானதே.
ஆனால் சட்டரீதியான பிரச்சினைகளுக்குத்  தீர்வு என்பது
முள்ளில் விழுந்த ஆடையை முழுமையாக  மீட்கும் பணியாகும்.
அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 பிரச்சினைகள் தீர்வில்  தாமதங்கள் நேரலாம்...
தடங்கல்கள் நேரலாம்...
ஆனால் தோல்விகள் நேர தொழிற்சங்கங்கள் இடம் தராது.
நமது சங்கம் இப்பிரச்சினையை தொடர்ந்து விவாதித்து வருகிறது.
இன்று டெல்லியில் நடைபெறும் மத்திய செயற்குழுவும்..
இப்பிரச்சினை தீர்விற்கு வழி தேடும்...

தோழர்களே... எந்தப்பிரச்சினைக்கும் தீர்வுகள் உண்டு...
ஆனால் தீர்வுகள் என்பது..
பொறுமை...நம்பிக்கை.. இடைவிடா முயற்சி.. என்பது மட்டுமே...

1 comment:

  1. ஆனால் தோல்விகள் நேர தொழிற்சங்கங்கள் இடம் தராது.
    அருமையான வார்த்தைகள்

    ReplyDelete