Thursday 4 June 2015

ஏட்டுச்சுரைக்காய் 

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" 
என்பது முன்னோர் மொழி..

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் 
முழுக்க முழுக்க அது உண்மையாகின்றது...

ஒப்பந்த ஊழியர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் 
அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் 
என்ற குரல் தற்போது ஆங்காங்கே ஓங்கி ஒலிக்கின்றது..

எப்போதெல்லாம் சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினையை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனவோ அப்போதெல்லாம் 
மேல்மட்ட நிர்வாகங்கள்  உடனடியாக ஒரு காகித உத்திரவை கீழ்மட்டங்களுக்கு அனுப்பிவிட்டு தங்கள் கடமையை முடித்துக்கொள்கின்றன. ஆனால் அவற்றில் ஓன்று கூட 
இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இன்று பல அத்தியாவசியப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு 
BSNL செயல்பாட்டை மேம்படுத்த முடியாது. 
பல ஆண்டுகளாக போக்கிடமற்று 
இங்கே பணிபுரியும் அவர்களும் 
தங்களுக்கு 
பணி நிரந்தரமோ..
உயர்  ஊதிய மாற்றமோ..
பதவி உயர்வோ கேட்கவில்லை...

கேட்பதெல்லாம் 
உரிய தேதியில் குறுகிய சம்பளம்.. 
அடையாள அட்டை.. 
மருத்துவ வசதி... 
EPF  பணத்தை  அவர்கள் கணக்கில் போடுவது.. 
ஆண்டுக்கு ஒரு முறை போனஸ்.. 
இவ்வளவே...

ஆனால் அவர்கள் மாதச்சம்பளத்திற்கே
இங்கே மன்றாட வேண்டியுள்ளது.
ஆகப்பெரும் அதிகாரமிக்க அதிகாரிகளும் 
பாரம்பரியமிக்க தொழிற்சங்கங்களும் உள்ள 
இந்த துறையில் அடிமட்ட ஊழியர்கள்
மாதச்சம்பளம் பெறவே  மன்றாடும் நிலை மிக மிக அசிங்கமாகும்.

குத்தகைக்காரன் குரங்குகள் போல 
மாவட்டம் விட்டு மாவட்டம் தாவித்திரிகிறான்..
அவனை ஒழுங்குபடுத்த ஏதும் வழி இல்லை...
குத்தகையை முறைப்படுத்த வேண்டும்..
முறையான குத்தகைக்காரரை தேர்வு செய்ய வேண்டும்..
தற்போது அனைத்தும் மையப்படுத்தப்படுகின்றது..
மாநிலம் முழுக்க ஒரே குத்தகையை மையப்படுத்தலாம்..

சம்பளம் வங்கிக்கணக்கில் போடப்படுகின்றதா..
சரியான தொகை சரியான நபருக்கு செல்கிறதா...
EPF.. ESI பிடித்தங்கள் முறையாக செலுத்தப்படுகின்றதா  என..
கணக்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்..

குட்டி குட்டி அதிகாரிகள் 
குத்தகைக்காரனிடம் கையேந்தும் இழிநிலை மாற வேண்டும்..

நான் உன்னிடம் வேலை மட்டுமே வாங்குவேன்...
நீ சம்பளம் எப்படியாவது வாங்கிக்கொள் 
என்று அதிகாரிகள் கூறும் அசிங்க நிலை அகல வேண்டும்..

மேல்மட்ட அதிகாரிகளும் தலமட்ட அதிகாரிகளும்..
தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்..மனமுவந்து 
இந்த பிரச்சினை தீர தங்கள் பங்கை செலுத்த வேண்டும்..

இந்த பிரச்சினையை மாநில நிர்வாகம்...
அவ்வப்போது ஓரக்கண்ணால்  பார்ப்பதை விட 
மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தை இதற்காகவே கூட்டி 
அவர்களுடைய பிரச்சினைகள் தீர வழி காண வேண்டும்.
உத்திரவுகளை நடைமுறைப்படுத்தாத 
மாவட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..  

அது விடுத்து மேல்மட்டத்திலிருந்து கடிதங்கள்  அனுப்புவதும்..
கீழ்மட்டங்கள்  கதைகள் சொல்வதும் 
கவைக்கு ஆகாது... கறிக்கு ஆகாது...

No comments:

Post a Comment