Tuesday 12 May 2015

E...R...P... 
 சாத்தான் எழுதிய வேதம் 
CODEX GIGAS 
சாத்தான் எழுதிய வேதம் என்று சொல்லப்படும்
CODEX GIGAS என்னும் நூலைக்
கண்ணால் பார்த்தவர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.  
தொட்டுப்பார்த்தவர்கள் தொடர் நோயில்  துன்பப்பட்டார்கள்.  
படித்தவர்கள் மரித்தார்கள்.  
உலகின் எட்டாவது துயரம் என்று பேசப்பட்டது அந்நூல். 

இன்று BSNLலில்... 
ஊழியர்களின் துயரமாக ERP உள்ளது. 
ERP என்ற சைத்தான் எழுதிய வேதத்தால்  
ஊழியர்கள் பட்ட வேதனைகள்  
ஒன்றா.. இரண்டா.. எடுத்துச்சொல்ல...


  • சென்ற மாதம் ERPயில் GPF விண்ணப்பித்திருந்தும் PRINT OUT அச்சுத்தாள் வரவில்லை என காரணம் சொல்லி காரைக்குடியில் ஏறத்தாழ 20 GPF விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரத்தை கணக்கு அதிகாரிகளுக்கு யார் வழங்கியது என்பதுதான் புரியவில்லை.  இம்மாதம் பல ஊழியர்கள் குழந்தைகளுக்கு  கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை. பெரும்பகுதி ஊழியர்கள் கிராமப்புறங்களிலும்,  தொலை தூரங்களிலும் பணி புரிகின்றார்கள்.  பல ஊழியர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். 15ந்தேதி ERPயில் விண்ணப்பித்தாலும் உடனடியாக கணக்கு அதிகாரியிடம் PRINT OUT வந்து சேராது. இந்நிலையில் இம்மாதமும் PRINT OUT   வராவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என  சாத்தானின் வேதம் ஓதப்படுகிறது.  அவ்வாறு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால்  பாதிக்கப்பட்ட ஊழியர்களை திரட்டி மாவட்ட அலுவலகத்தில் மறியல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அன்போடு நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டக்  கடமைப்பட்டுள்ளோம்.

  • நமது சம்பளப் பட்டியலில் வருமான வரிப்பிடித்ததைப்   பார்க்கும்போது நெஞ்சம் பற்றி எரிகின்றது. நிதியாண்டின் கடைசி மாதங்களில்தான் வருமான வரிப்பிடித்தம் கூடுதலாக இருக்கும். இங்கோ வருடத்தின் ஆரம்பத்திலேயே கொடுமை துவங்கி விட்டது. வீட்டுக்கடன்... வீட்டு வாடகை.. தனிப்பட்ட சேமிப்புக்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விலக்கு.. என எதுவுமே நமது ERP என்னும் சாத்தானின் வேதத்தில் கண்டு கொள்ளப்படவில்லை.

  • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே விடுப்புச்சம்பளம் LEAVE SALARY வழங்கபட்டு வந்தது. சாத்தானின் வேதத்தில் விடுப்புச்சம்பளம் ஓய்வு பெறும் அன்றே வழங்க முடியாதாம். அடுத்த மாதம் நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் போடும்போதுதான் வழங்கப்படுமாம்.

  • இறந்து போன ஊழியர் குடும்பங்களின் நிலை இன்னும் பரிதாபம். அக்டோபர் 2014ல் இறந்த அழகன்குளம் சீனி என்பவரது குடும்பத்திற்கு இன்னும் விடுப்புச்சம்பளம் வழங்கப்படவில்லை. சாத்தானின் வேதத்தில் சீனியின் குடும்ப விவரம்.. வறுமை நிலவரம்   இன்னும் ஏறவில்லையா என்பது தெரியவில்லை. 

  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணி புரியும் தோழர்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தைச் செலுத்துவதற்காக  போக்குவரத்துப்படி வழங்கப்படுகின்றது. சாத்தானின் வேதத்தில் இப்படியை.. எப்படி வழங்குவது என்பது முறைப்படி குறிப்பிடப்படவில்லையாம். எனவே காசாளர்கள் ஏறத்தாழ       10மாதமாக  இலவச சேவையை இலாக்காவிற்கு அளித்துக்கொண்டுள்ளனர்.

தோழர்களே...
ERP என்னும் இந்த சாத்தானின் வேதத்தால் 
நாம் படும் துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.. 
மாவட்டத்தில் பணி புரியும் அதிகாரிகள் 
கூலாக மாநிலத்தைக் கைகாட்டுவதும்.. 
மாநில அலுவலகத்தில் தொலைபேசியை தொடாமல் இருப்பதும்...
நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது...
வெறும் ஆர்ப்பாட்டங்களும்.. 
அம்பலப்படுத்துதலும்..
சாத்தானின் வேதத்தை சரி செய்து விடாது...
 
உறுதியான போராட்டம்...
ஒன்றுபட்ட போராட்டம்..
தலமட்டங்களில் போராட்டம்...
தலைநகரில் போராட்டம்....
இதுவே...
சாத்தானை அசைக்கும் சாத்தியக்கூறாகும்..
தயாராவோம் தோழர்களே...

No comments:

Post a Comment