Thursday 7 November 2013

சொல்லக் கொதிக்குதடா..

சுரண்டலை ஒழித்து பொதுவுடைமை சுதந்திரம் தந்த 
நவம்பர் 7 நவயுகப்புரட்சியை எல்லோரும் பெருமிதத்துடன் நினைவு கொள்கின்றோம். ஆனால் இன்றோ  சுரண்டல் நாளும் வளர்ந்து வருகின்றது... பொதுவுடைமை தளர்ந்து வருகின்றது. 

ஒப்பந்த ஊழியர்கள் என்று நாமம் இடப்பட்ட மனிதர்கள் உரிய சம்பளம்,சேமநலநிதி,மருத்துவ வசதி, போனஸ் என்ற  
அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு 
நாமம் இடப்பட்டு ஒரங்கட்டப்படுகின்றார்கள். 

காரைக்குடி மாவட்டத்தில் நிரந்தர ஊழியர்களை விட எண்ணிக்கையிலும் வேலைத்திறனிலும் ஒப்பந்த ஊழியர்கள் விஞ்சி நிற்கின்றார்கள்.
 ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகப் பணி புரிந்து வரும் தோழர்கள் அதிகம்.  இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு உரிய சம்பளம் உரிய தேதியில் கொடுக்கப்படுவதில்லை. அவர்களது சேமநலநிதி கணக்கு EPF இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. மருத்துவ வசதி என்னும் ESI வழங்கப்படவில்லை. போனஸ் கொடுக்கப்படவில்லை. ஏதேனும் விபத்து நடந்து விட்டால் இழப்பீடு  வழங்க வழியில்லை.. நாதியில்லை.

  இந்நிலையில்  இந்த ஆண்டு போனஸ் கொடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை எழுப்பினோம். AC பராமரிப்பு மற்றும்  கேபிள் பராமரிப்பில் பணிபுரிபவர்களுக்கும், GM அலுவலகத்தில் பணிபுரியும் தோழர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டது. உடனே சில  வறட்டு  அதிகாரிகள் கொதித்து எழுந்து விட்டனர். அதிகாரிகள் மட்டுமல்ல சில புரட்டுத்தொழிற்சங்கத்தலைவ்ர்களும் கூட.. இதை எதிர்க்க முற்பட்டனர். கொடுத்த போனசை சம்பளத்தில் பிடிப்போம் என கொக்கரிக்க ஆரம்பித்து விட்டனர். மாவட்ட பொது மேலாளரோ,  நிதிநிலை, சட்டம்,விதிகள் என்று மழுப்பி ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் 
மெய்ப்பொருள் காண மறுக்கின்றார்.

இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. 
உலகம் முழுமையும் சுரண்டலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும். 
உள்ளூரில் நம் உடன் இருப்பவன் சுரண்டப்படுவதை முதலில் தடுப்போம். ஒப்பந்த ஊழியருக்கு உரிய உரிமைகள் கிடைத்திட 
விரைவில் களம் அமைப்போம். 
அதுவே நவம்பர் புரட்சியை நாம் நினைவு கொள்ளும் முறையாகும்.  

1 comment:

  1. நமது BSNLல்கடந்த 8 ஆண்டுகளாக ஊழியர்களின் சுரண்டலை நிர்வாகத்தோடு சேர்ந்து ஆதரிப்பதே எம் [M] வேலையாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதை முறியடிக்க வேண்டும்

    ReplyDelete