Monday 30 May 2022

 எல்லாப் புகழும்... NFTEக்கே... 


தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்று 31/05/2022

பணி நிறைவடைகிறது...

மனமும் நிறைவடைகிறது...

அருமைத்தலைவர் தோழர்

கடலூர் ஜெயராமன் அவர்கள் துவக்கி வைத்தார்

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக

தோழர்களின் அன்பு மழையும்....

வாழ்த்து மழையும்...

மாறி.. மாறி..

மாரி போல்.. மாரி மேல்

தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது... 

அன்புஈனும்  ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

என்றார் வள்ளுவர்...

அன்பிற்கும் அது வளர்க்கும் தோழமைக்கும்

ஈடு இணை இவ்வுலகில் இல்லை.


எல்லோருக்கும் நன்றி சொல்லும் நேரமிது...

சிந்தையில் நிறைந்த தந்தை தாய்க்கும்...

விந்தைகள் புரிந்த சங்கத்திற்கும் முதல் வணக்கம்...

 

தந்தையும் தாயுமாய் உடனிருந்து செதுக்கிய

அன்புத்தோழர் அய்யர் என்னும் வெங்கடேசன்... 

முரட்டு அன்பால் என்னை நித்தமும் மூழ்கடித்த...

மூத்த சகோதரர் இராமநாதபுரம் சவுக்கத் அலி... 

என் குறைகளையும் நிறைகளாகப் பார்த்து...

அளவு கடந்த அன்பு செலுத்திய

காரைக்குடி கருத்த முருகன்... 

மூவரும் அமரராகி விட்டனர்...

ஆனாலும் நெஞ்சின் சோக அனல் 

இன்றும் அணையவில்லை.

அவர்களுக்கு விழியோரம் கசிய வீர வணக்கம்...

 

தொழிலாளர் படும் துயரத்தை

தன் துயரமாகப் பார்க்க வேண்டும்  என்ற

தொழிற்சங்க தாரக மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து

சங்கத்தில் மாவட்டச்செயலராகப் பிடித்து வைத்த

அருமைத்தோழர் ஆர்.கே., அவர்களுக்கு வணக்கம்.

 

அருமைத்தோழர்கள்

குப்தா, ஜெகன், விச்சாரே, கோலி,

சந்தேஷ்வர் சிங், இஸ்லாம் அகமது,

ஜெயபால், ரகு

முத்தியாலு, மாலி, ஆர்.வி., பட்டாபி,

சேது, ஜெயராமன்,

காமராஜ், நடராஜன், முரளி

என்று மாபெரும் தலைவர்களைக்

கொண்டது... கண்டது நமது இயக்கம்...

 

அகில இந்தியத் தலைவர்கள் முதல்...

காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் முருகன் வரை...

அனைத்து சங்கப் பொறுப்பாளர்களுக்கும்

அன்பு வணக்கங்கள்...

 

ஓய்வு பெற்றாலும் ஓயமாட்டோம் என்று

தொடர்ந்து சங்கப்பணி செய்து வரும்

ஓய்வூதிய சங்கத்தலைவர்கள்  தோழர்கள்

முருகன், நாகேஸ்வரன்,பூபதி வழிநடத்தும்

ஓய்வூதியர் சங்கத்தலைவர்களுக்கும்...

உள்ளன்போடு நேசித்து வரும்

ஓய்வூதியர் சங்கத்தோழர்களுக்கும்

சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

 

உணவிட்டு... உணர்விட்டு எங்களை

தோழமையோடு வளர்த்த

அன்புத் தோழர் கணபதிராமனுக்கு வணக்கம்..

 

என் உடன் பயிற்சி எடுத்து...

சோகத்திலும்...சுகத்திலும்

தொடர்ந்து பங்கெடுத்த அன்புத்தோழர்கள்

அலமேலு,புவனேஸ்வரி, இராஜேஸ்வரி,தேன்மொழி,

சொக்கலிங்கம், முனியாண்டி,நாகராஜன்,

ஆகியோருக்கும் அன்பு வணக்கங்கள்...


அன்பு இளவல்களாக

என்னோடு என்றும் பயணிக்கும்

சுப்பிரமணி,லால்,ஜெயராமன்,ஆரோக்கியம், ஜேம்ஸ்,

காதர்பாட்சா, சுபேதார்,தமிழ்மாறன்,கார்த்திகா

மற்றும் அனைத்து தோழர்களுக்கும்

அன்பு வணக்கங்கள்...

 

1983ல் மணிக்கு 2 ரூபாய் 75 பைசா கூலி

என்ற கணக்கில் அன்றாடக்கூலியாய்

வருமானம் கொடுத்து வயிற்றுக்கு சோறிட்ட

தொலைத்தொடர்பு இலாக்கா...

இன்று மாதம் இருபதாயிரம் ரூபாய்

வருமான வரி கட்டும் அளவிற்கு...

பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு வணக்கம்...


தோழர்களே...

விடை பெறும் நேரமிது... 

நாம் சாதியில் பின்தங்கி இருக்கலாம்...

பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கலாம்... 

ஆனால் ஒருபோதும்...

அறிவிலும், திறமையிலும் பின்தங்கக்கூடாது...

என்று தந்தையார் அடிக்கடி கூறுவார்... 

அறிவிலும், திறமையிலும்

எந்த அளவு என்பதை

அடுத்தவர்தான் கூற வேண்டும்..

 

ஆனால்...

கூடுதலாக என் வாழ்வில்

நான் ஏற்றுக்கொண்டது...

அறிவு.... திறமை...

அதோடு நேர்மை... 

வாழ்நாள் முழுவதும்

நேர்மையாக இருக்கப் போராடியுள்ளேன்... 

1983ல் காரைக்குடியில்...

தாயார் யாரிடமோ கடனாக வாங்கித் தந்த

100 ரூபாயுடன் பணியில் அமர்ந்தேன்... 

இன்று 2022 மே மாதக்கடைசி

மதுரையில்...

என் வங்கி இருப்பைப் பார்த்தேன்.

105 ரூபாய் 68 பைசா என்று காட்டியது. 

நேர்மையாக வாழ்ந்திருக்கின்றோம்

என்பதை 105.68 காட்டியது... 

அந்த மனநிறைவோடு விடை பெறுகிறேன்... 

அன்புடன்

வெ. மாரி

Sunday 29 May 2022

 பணி நிறைவு என்னும்

விடுதலை... 

தோழர்களே...

நாளை 31/05/2022 செவ்வாய்க்கிழமை...

மத்திய அரசின் பொதுத்துறைப் பணியில் இருந்து

பணி நிறைவு என்னும் விடுதலை தரப்படுகின்றது.

மனம்  அவ்வாறுதான் உணர்கிறது.


தொடக்கம் என்று ஒன்றிருந்தால்

முடிவு என்று ஒன்றிருக்கும்.

எனவே பணி நிறைவு என்பது

ஒரு  தொடங்கப்பட்ட

அத்தியாயத்தின் முடிவே. 


24/11/1983 அன்று...

NFPTE சம்மேளன தினத்தன்று

குறுநேரப்பணி எழுத்தர் என்னும்

அன்றாடக்கூலியாய்

காரைக்குடி தொலைபேசிக் கோட்ட

வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில்

தபால் தந்தி இலாக்கா பணி செய்ய வாய்ப்பளித்தது. 

1984ம் ஆண்டு...

மேல் படிப்பிற்காக சோவியத் ரஷ்யா

செல்லும் வாய்ப்பு வந்தது.

இராமநாதபுரம் பகுதியின் மாபெரும்

பொதுவுடைமை இயக்கத்தலைவர்

தோழர். மங்களசாமி அவர்கள்

நேரில் வந்து அழைத்துப் பேசினார்.

உனது குடும்ப நிலை

நன்றாகவே எனக்குத் தெரியும்.

தந்தையை இழந்த நிலையில்...

தபால் தந்தி இலாக்கா

வாழ்வதற்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

அது அன்றாடக்கூலியாக இருக்கலாம்.

ஆனாலும் உனது குடும்பத்திற்கு

உன்னால் உணவளிக்க முடிகிறது.

சோவியத் ரஷ்யா சென்று படித்துத் திரும்பினால்

உன்னுடைய உணவிற்கே நீ திண்டாட வேண்டும்.

தபால் தந்தி இலாக்காவில்

நமது சங்கம் வலுவாக உள்ளது.

அங்கே ஜெகன் என்னும் நமது தோழர் இருக்கின்றார்.

நிச்சயம் சங்கம் உன் போன்றவர்களைக் கைவிடாது.

எனவே சோவியத் ரஷ்யா செல்லும் முடிவைக் கைவிடு

என்று அன்போடும் அழுத்தமோடும் கூறினார்.

 

மூத்தோர் சொல் கேட்பது என்பது

உதிரத்தில் ஊறிய பண்பு என்பதால்

அவரது அறிவுரையை ஏற்று

தபால் தந்தியில் பயணம் தொடர்ந்தது. 

இரண்டரை ஆண்டுகாலம் ஆனபின்பு

01/05/1986...

மாபெரும் மேதின நூற்றாண்டு தினத்தில்...

அன்றாடக்கூலிகளாக அனுதினமும்...

அல்லல்பட்டுக்கொண்டிருந்த தோழர்கள்

மத்திய அரசின் நிரந்தர ஊழியர்களானோம்.

சங்கம் சாதித்தது....

 

இராமநாதபுரம் கிளைப்பொருளராக...

காரைக்குடி கோட்ட அலுவலக செயலராக...

வெகுவிரைவில் கோட்டச் செயலராக...

சங்கத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. 

தொழிலாளருக்காக உரிமையைக் கோரும்போது

அதிகாரிகள் சட்டம் என்றும் விதிகள் என்றும்

சட்டாம்பிள்ளைத்தனம் செய்தனர்.

சட்டமும், விதியும்

எல்லோருக்கும் பொதுவானது.

தொழிலாளரை அடக்க

அதை அதிகாரிகள் பயன்படுத்துகின்றார்கள்...

நமது முன்னோர்கள்

போராடிப் பெற்ற உரிமையை

தொழிலாளர்கள் அடைவதற்கு

அதே சட்டங்களை மேற்கோள் காட்டி

நாம் போராட வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

விதிப்புத்தகங்களை விலைக்கு வாங்கினோம்...

விதி யாரை விட்டது.... 


1994...

இளநிலை கணக்கு அதிகாரியாகத்

தேர்வில் வெற்றி கிட்டியது.

குஜராத், விருதுநகர், காரைக்குடி...

என்று தொடர்ந்த பயணம்

2022ல்...

மதுரையில் நிறைவு பெறுகின்றது.

 

அளவு கடந்த அன்பால்...

பணிநிறைவு பாராட்டு விழா நடத்திட

தோழர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மனம் உறுதியாக மறுதலிக்கிறது... 

சங்கப்பணத்தில்...

மாலை... மரியாதை என்பதை

உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை...


எனவே தோழர்கள்

அதீத அன்பால்...

அளவு கடந்த உரிமையால்...

வறண்டு போன வைகைக்கு சொந்தமான

மதுரைக்கு வந்து அல்லல் படவேண்டாம். 

பணிநிறைவு என்னும்

விடுதலை அடைந்த பின்பு

நாம் நேரில் சந்திப்போம்...

நிறையப் பேசுவோம்...

தொடர்ந்து செயல்படுவோம்... 

இடம் பெயர்ந்த வாழ்த்து எதற்கு?

நாமெல்லாம் இடதுசாரிகள்.... எனவே

இருக்கும் இடமிருந்தே வாழ்த்துங்கள்...

வலம் வந்து வாழ்த்த வேண்டாம்... 

எனவேதான் ஒருநாள் முன்னதாக

இந்த அன்பு வேண்டுகோள்...

 

அன்புடன்

வெ.மாரி

Monday 23 May 2022

 AUAB 

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

 

BSNL ஊழியர்களுக்கு

3வது ஊதிய மாற்றம்

உடனே வழங்கக்கோரி

 நாடு தழுவிய

ஆர்ப்பாட்டம்

 ------------------------------------------------------

27/05/2022  - வெள்ளிக்கிழமை  

காலை 10.00 மணி

தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்.

----------------------------------------

காலை 11.00 மணி

தொலைபேசி நிலையம் - பரமக்குடி.

----------------------------------------

மாலை 05 மணி

துணைப்பொதுமேலாளர் அலுவலகம்-காரைக்குடி.

----------------------------------------

ஆண்டுகள் ஐந்தாய் கிடப்பில் கிடக்கும்

ஊதியமாற்றத்தை அடைந்திட

தொடர்ந்து குரல் கொடுப்போம்...

நிரந்தர ஊழியர்களும்....

பணிநிறைவு பெற்ற தோழர்களும்

திரளாய்க் கலந்து கொண்டு

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட

கேட்டுக்கொள்கின்றோம்.

தோழர்களே... அணி திரள்வீர்...

---------------------

AUAB -  BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

காரைக்குடி. 

Wednesday 18 May 2022

ஊதிய மாற்றம் கோரி 

AUAB அதிரடி போராட்டம்

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின்

மிக முக்கிய கோரிக்கையும்...

கடந்த 5 ஆண்டுகளாக

மத்திய அரசால்...

BSNL நிர்வாகத்தால் 

கண்டுகொள்ளப்படாத கோரிக்கையுமாகிய

3வது ஊதிய மாற்றம் கோரி

AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு

அதிரடி போராட்ட 

அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.

 

போராட்டத் திட்டங்கள்


   👉  27/05/2022   

          மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டம்.

     👉14/06/2022

           TWITTER மூலம் பிரச்சாரம். 

    👉01/06/2022 முதல் 30/06/2022 வரை

         ஜூன் மாதம் முழுக்க நாடாளுமன்ற    

         உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத்

        தவம் கிடந்து சந்தித்துக்

        கோரிக்கை மனு அளித்தல்.... 

   👉இறுதியாக... 

        சஞ்சார் பவன் நோக்கிப் பேரணி 

       (இன்னும்  நாள் குறிக்கப்படவில்லை)

-------------------------- 

தோழர்களே...

நமது ஆர்ப்பாட்டத்தில் அரசு அடங்கட்டும்...

TWITTER பிரச்சாரத்தில் தேசம் அதிரட்டும்....

கோரிக்கை மனுவில் 

நமது கோபம் கொப்பளிக்கட்டும்...

சஞ்சார் பவன் பேரணியில் 

சகலமும் கிடைக்கட்டும்...

பொங்கி எழுங்கள்... 

போராடுங்கள்...

Friday 13 May 2022

 புத்தன்... ஜெகன்... பிறந்த நாள் விழா

AIBSNLPWA - NFTE BSNL - TMTCLU

புத்தன்... ஜெகன்...

பிறந்த நாள் விழா

மற்றும்

மறைந்த ஒப்பந்த ஊழியர் 

தோழர் ஜான் சாமுவேல்

குடும்ப நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு...

 ------------------------------------------

16/05/2022 – திங்கள் – காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – பரமக்குடி.

  ------------------------------------------

தோழர்களே... வாரீர்...

அன்புடன் அழைக்கும்

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம்

ஒப்பந்த ஊழியர் சங்கம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்